Monday, October 13, 2008

டெஹல்கா அறிக்கை - 2"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்!

"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்!
எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் பொதுவாக, போர் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில்தான் பொதுமக்கள் இருப்பர். ஆனால், போர் தொடர்பான முடிவுகளை அரசியல் தலைவர்களே எடுக்கின்றனர். ஜனநாயகம், பாஸிஸ ஏகாதிபத்தியம், கம்யூனிஸத் தலைமை என எதுவாக இருந்தாலும் போரின் மீதான தங்களது அனுகூல நிலைபாட்டைப் பொதுமக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது அவர்களுக்கு இலகுவான காரியம். மக்களைத் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களுக்குச் சாதகமாகப் பக்குவப்படுத்தி எடுப்பதற்கு அவர்களால் இயலும். அதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், "அமைதி விரும்பிகளை தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குபவர்கள் என்றும் முத்திரை குத்துவதோடு, இவர்களால் மக்கள் ஆக்ரமிக்கப்படுகின்றனர் என்றும் திரும்பத் திரும்பக் கூற வேன்டியது மட்டுமே. எந்த நாடாக இருந்தாலும் இத்தந்திரம் நன்றாகச் செயல்படும்" - ஹர்மன் வில்லியம் கோரிங் - நாஸி கட்சித் தலைவர்.
2001 செப்டம்பர் 27 காலைப் பொழுது
மாற்று மருத்துவமுறைகளில் ஒன்றான யுனானி சிகிச்சையில் மருத்துவர் பட்டம் பெற்ற சிமி அகில இந்தியத் தலைவர் ஷாஹித் பத்ர் ஃபலாஹி தனது இயக்கச் சகோதரர்களுடன் தில்லி அலுவலகத்தில் அளவளாவிக் கொண்டிருந்தார். உத்தரப் பிரதேசம் முழுவதுமாக இரண்டு வாரகாலம் நீண்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து விட்டு முந்தைய இரவே அவர் தில்லி திரும்பி இருந்தார். அவரது அலுவலகத் தொலைபேசி சிலமணி நேரங்களுக்கு முன்பு ஏதோ காரணத்தால் துண்டிக்கப்பட்டதால், அலுவலகத்திற்கு அருகிலுயுள்ள பொதுத் தொலைபேசி நிலையம் வழியாக நாட்டின் பலப் பகுதிகளிலுள்ள சிமி பொறுப்பாளர்களுடன் பேசி முடித்து விட்டு, அப்பொழுதுதான் வந்து அமர்ந்திருந்தார். மும்பை, லக்னோ, இன்தூர், கொல்கொத்தா, சென்னை, கோழிக்கோடு போன்ற இடங்களிலுள்ள இயக்க அலுவலகங்களை எவ்வித விளக்கமும் கூறாமல் காவல்துறை மூடி சீல் வைத்த விஷயத்தைப் பொறுப்பாளர்கள் ஃபலாஹியிடம் தொலைபேசி உரையாடலின்போது தெரிவித்திருந்தனர்.
இதற்கான காரணத்தை அன்று மாலை 4 மணிக்கே அவரால் அறிந்துக் கொள்ள முடிந்தது. "சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான 1967இல் இயற்றப்பட்டச் சட்டத்தை உபயோகித்து உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்விதம், மத்திய உள்துறை அமைச்சகம் சிமியை இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்ததாக"த் தொலைகாட்சியில் வந்த செய்தியைக் கண்டபொழுதுதான் அவருக்குக் காவல்துறையினரது நடவடிக்கைகளுக்கான காரணம் புரிந்தது. சிமியின் இலட்சியம் என்ன என்பது தெளிவாகி விட்டதாகவும் மாநில அரசுகள் நல்கிய விவரங்கள் இதனை உறுதிப் படுத்துவதாகவும் அன்று மாலை உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். சிமி நாட்டுப் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடியச் செயல்பாடுகளில் பரவலாக செயல்படுகின்றது எனவும் அது நாட்டின் அமைதியையும் சமுதாய நல்லிணக்கத்தையும் தகர்ப்பதற்கும் நாட்டின் மதச்சார்பற்ற நிலைபாட்டைச் சிதைப்பதற்கும் வாய்ப்புண்டு எனவும் 6 பத்திகளிலான அரசு அறிக்கையில் கூறப்பட்டது. இவற்றை உறுதிப் படுத்தும் வகையில் சிமிக்கெதிரான உறுதியான ஆதாரங்களுடன் கூடிய வழக்குகள் அரசின் கைவசம் உண்டு எனவும் அவ்வறிக்கை கூறியது.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களிலுள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு,
இந்தியாவின் ஒரு பாகத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என வாதம் செய்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது,
அகண்ட இந்தியாவின் நிலப்பரப்பு மீது கேள்வி எழுப்பியது,
சர்வதேச இஸ்லாமிய மயமாக்கலுக்காகச் செயல்பட்டது,
மதவெறியைத் தூண்டி விடுவதற்குச் சாத்தியமுள்ளதும் ஆட்சேபகரமானதுமான சுவரொட்டிகள்-கட்டுரைகள் வெளியிட்டது,
முஸ்லிம்களை ஜிஹாத் செய்வதற்குத் தூண்டியது
முதலியவை சிமிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகள். அவற்றுள் மிகவும் அபாயகரமானது, இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை உருவாக்க சிமி முயல்கின்றது என்ற அரசின் வாதமாகும்.
(பாஜக ஆட்சியில் ஏறியவுடனேயே சிமி மீதான)தடை வரும் என்பதை சிமி தலைமையும் ஃபலாஹியும் அறிந்திருந்தனர். உண்மையில், அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த 2001 செப்டம்பர் 11 முதல் ஒரு மாத காலம், சிமிக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் அத்வானி வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் அந்நேரத்திலேயே அத்வானியின் குற்றச்சாட்டுகளுக்கு ஃபலாஹி பதில் அளித்திருந்தார். அதற்கு முன்பு ஆகஸ்ட் 20 அன்று ஃபலாஹி அளித்திருந்த பத்திரிக்கைச் செய்தி (பாஜக அரசின் அநியாய செயல்பாடுகளுக்கு எதிராக), கடுமையான வாசகங்களுடன் அமைந்திருந்தது. அப்போதைய தினங்கள், சிமியின் தீர்க்கமான (அநியாயத்திற்கெதிரான) அறிக்கைகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தினங்களாக இருந்தன.
முஸ்லிம்கள் இனிமேலும் அவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொறுக்க மாட்டார்கள் என்றும் தங்களின் உரிமைகளுக்காக அவர்கள் தீர்க்கமான ஒரு போராட்டத்தை நடத்த விரைவிலேயே களமிறங்குவார்கள் என்றும் ஃபலாஹி (அப்பத்திரிக்கைச் செய்தியில்) கூறியிருந்தார். "அதிகரித்து வரும் இஸ்லாமிய எச்சரிக்கை உணர்வும் பாதுகாப்பு உணர்வும் சங்கபரிவாரத்தைக் கவலைக்குள்ளாக்குகின்றது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கும் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கும் மிகப் பெரியத் தடையாக அவர்கள் சிமியைக் கருதுகின்றனர்" என்றும் அவர் கூறியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியைக் குறித்து அதே செய்தியில், "1992 ல் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு அத்வானியும் ஆர்.எஸ்.எஸ்ஸும்தான் முழுப் பொறுப்பாளர்கள்" என்று கூறியிருந்தார். 1990களில் அத்வானி நடத்திய ரத யாத்திரை இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை உருவாக்கி விட்டதையும் ஃபலாஹி அதில் சுட்டிக் காட்டினார். (இதே காலகட்டத்தில், பாபர் மசூதியைத் தகர்க்க சங்கபரிவாரம் முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் அதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டதாகவும் பின்னர், 1992இல் கரசேவை நடத்தப்போவதாக சங்கபரிவாரம் அறிவிக்கும் முன்னரே அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஆர்.எஸ்.எஸ் பாபரி மஸ்ஜிதைத் தகர்க்கப்போவதாகவும் சிமி தனது ஏடுகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூறிக் கொண்டிருந்தது.)
இன்றுவரை சிமிக்கு எதிராக கூறப்படும் ஒரு குற்றச்சாட்டுகூட நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அதேசமயம், கிறிஸ்த்துவர்கள், முஸ்லிம்கள், தலித்கள் ஆகியோர் மீது சங்கபரிவாரம் நடத்தும் திட்டமிட்டத் தாக்குதல்களைப் பல விசாரணை கமிஷன்கள் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்துள்ளன.
தடை உத்தரவை அறிந்த பின்னர் செப்டம்பர் 27 அன்று காவல்துறையினரின் வருகையினை எதிர்பார்த்து ஃபலாஹியும் அவருடன் மற்றும் மூன்று நிர்வாகிகளும் சிமி அலுவலகத்தின் உள்ளே காத்திருந்தனர். அன்று நள்ளிரவு ஒரு டஜன் காவல்துறையினர் அலுவலகக் கதவை உடைத்துத் திறந்து அவர்களைக் கைது செய்து கொண்டு போனார்கள். அந்நிகழ்ச்சியைப் பற்றி, "எங்களுக்குக் கதவைத் திறப்பதற்கான வாய்ப்புகூடத் தராமல், கதவை உடைத்துத் தள்ளி உள்ளே புகுந்தனர்" என உத்தரபிரதேசத்திலுள்ள அவரது கிராமமான அஸங்கடில் வைத்து ஃபலாஹி தெஹல்காவிடம் கூறினார். ஃபலாஹி வேலை பார்ப்பதும் வசிப்பதும் இக்கிராமத்திலாகும். காவல் நிலையத்திற்குக் கொண்டுபோய் சேர்க்கும்வரை காவல்துறையினர் தங்களைத் தாக்கியதாகவும் அடித்து உதைத்ததாகவும் அவர் கூறினார். "நாடு முழுவதும் நடத்திய வேட்டையில் ஃபலாஹி உட்பட 240 க்கும் மேற்பட்ட சிமி உறுப்பினர்கள் கைது" செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

No comments: