Friday, October 10, 2008

சிமி தடை - தெஹல்கா விசாரணை அறிக்கை தமிழில்

சிமி தடை - தெஹல்கா விசாரணை அறிக்கை - 1.
வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்!
சிமியைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் கூறுபவை அனைத்தும் கலப்படமற்ற, படுசாமர்த்தியமான பச்சைப் பொய்கள் என தெஹல்கா நிருபர் அஜித் ஸாஹி அனாயாசமாக ஆதாரங்களுடன் நிறுவுகின்றார்.
படித்து மனம்வெறுத்துப் போய்விட வேண்டாம். இதுதான் இன்றைய இந்தியாவில் நீதி, காவல், அதிகார துறைகளின் அவலநிலை.
தெஹல்கா விசாரணை அறிக்கையின் முக்கிய பாகங்கள் இன்று முதல் இங்கு வெளியிடப்படுகின்றது.சப்தர் நாகோரி, அன்ஸார், அபூ பஷீர் அல்-காஸ்மி ஆகியோர், குஜராத் காவல்துறையால் அஹமதாபாத் குன்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ள இளைஞர்கள். இவர்களும் சதித் திட்டம் தீட்டிய இயக்கமாக முன் நிறுத்தப் பட்டிருக்கும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு என்ற சிமியும் திட்டமிட்ட, அபாயகரமான ஒரு துர்பிரச்சாரத்திற்கு பலிகளா?

முதலில் தெஹல்கா தலைமை எடிட்டர் தருண் தேஜ்பால் எழுதிய அறிக்கையின் முகவுரை குறிப்பு:

இந்திய அரசு என்பது நீதி மறுக்கப்பட்ட ஒரு அபாயப் பிரதேசம் என தெஹல்காவின் பரவலான பல விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.

சுர்ஜித் சிங் பென்டா என்பது அவர் பெயர். அவர் மரணமடைந்ததைக் கண்ட அனேகரில் நானும் ஒருவன். அது நடந்தது 1988ஆம் ஆண்டு. சாமர்த்தியமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தங்கக்கோயில் தடையினைத் தொடர்ந்து, கோயிலின் தெய்வீகப் பீடமான ஹர்மந்திர் சாஹிபில் ஒளிந்திருந்த அனைத்துத் தீவிரவாதிகளும் ஆயுதங்களைக் கீழே வைத்துச் சரணடைந்திருந்தனர். அங்கிருந்து அவர்களைக் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள சராயி பவனில் கொண்டு சென்று, அனைவரையும் வரிசையாகக் குனிய வைத்த நிமிடத்தில் திடீரென அந்த அசம்பாவிதம் நடந்தது.

காவல்துறை கண்காணிப்புக் குழு ஒரு முக்கியத் தீவிரவாதியை அடையாளம் கண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவன்மீது கைவைக்கும் முன்பே அந்நபர் சயனைடை விழுங்கினார். மருத்துவமனையில் சேர்க்கக் காவல்துறை அவரை ஜீப்பில் ஏற்றியது. ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்து விட்டிருந்தார். அவர் தான் சுர்ஜித் சிங் பெண்டா. பெண்டாவின் சோகக் கதை இங்குக் கூறப்பட வேண்டிய கட்டாயம் யாதெனில், அது கொடுமைப் படுத்தப்படுதலின் முறையைத் தெளிவாகக் காண்பித்துத் தருகின்றது.

1984 - இல் நடத்தப்பட்ட மிருகத்தனமான சீக்கியப் படுகொலையைக் காண்பதற்கு முன்புவரை அந்தச் சீக்கிய இளைஞர், புது தில்லிக்கான தேசிய விளையாட்டு வீரராக இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சயனைடு உண்டு தற்கொலை செய்யப்படும் கால கட்டத்திற்குள் 40க்கும் மேற்பட்டக் கொலை வழக்குகளில் அவரைக் காவல்துறை பிரதியாக்கியிருந்தது.

இந்தியத் திருநாடு பெண்டா மீது பிரயோகித்தத் தீவிரவாதப் பொய் குற்றச்சாட்டுகளும் அதனைக் காரணமாக வைத்து அவர் மீது பிரயோகித்திருந்த கொடுமைகளும் அவரைத் தீவிரவாதியாக்கியது. நாடு சுட்டிக்காண்பிக்கும் தீவிரவாதிகளின் கதைகள் பலவற்றிலும் இதுதான் நிலைமை. அரசு அதிகாரங்களின் அக்கிரமங்கள் தீவிரவாதம் செழித்து வளர்வதற்கு விதை விதைக்கின்றன. அதனைத் தொடர்ந்து அதனால் உரம் போட்டு உருவாக்கப்பட்ட இதுபோன்ற தனி நபர்களின் தீவிரவாதங்களும். நீதியை நடைமுறைப்படுத்துதப்படுவதில் சர்வாதிகார மனோபாவம் பல வேளைகளிலும் கடைபிடிக்கப்படுகின்றது.

அது இந்தியாவில் அபாயகரமாகும் விதத்தில் ஒவ்வொரு தினமும் மோசமாகி வருகின்றது. நக்ஸலைட்டுகள், அக்கிரமக்காரர்களாக மாறுவதற்கு முன்பு காவல்துறையின் இரைகளாக இருந்தனரே?. வடக்கிலும் கிழக்கிலும் காஷ்மீரிலும் இளம் தீவிரவாதிகளோடு மிருகத்தனமாக நடந்து கொள்ளப்பட்டதே?, அவர்களின் குணம் மிருகத்தனமாக மாறுவதற்கு முன்பு!. சாதாரண குடிமகனுடன் மோசமாக நடந்து கொள்ளப்பட்டதே? அவன் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கும் முன்பு!. காவல்துறையைப் பயத்துடன் காண்கின்ற - காக்கி உடை அணிந்த மனிதர்கள் நேர்மையாகச் செயல் படுவர் என ஒருவர்கூட நம்பிக்கை கொள்ளாத - ஒரு நாட்டைக் குறித்து ஒருவர் என்ன கூறுவார்?.

அனைவரும் கட்டாயமாகப் பேண வேண்டிய சமாதானமான ஒரு வாழ்க்கை முறைக்குப் பதிலாக தெய்வவிரோதமான கொள்கைகள், சகிப்புத்தன்மையற்ற, ஹிம்சை துவங்கிய அபாயகரமான சிந்தனைகளைச் சில இயக்கங்கள் கொண்டுள்ளன. சிமி அத்தகையதொரு இயக்கம் எனில், அது நம்முடைய ஆட்சேபணையையும் விமர்சனத்தையும் பெறத் தகுதியானதே. அது சட்டத்தை மீறவும் வேற்றுமைகளை மக்களிடையே வளர்க்கவும் செய்கின்றது எனில், அதனைக் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, அதைச் சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால் அதே சமயம் அது பரவலாகத் திட்டமிட்ட முன்முடிவுகளுடன் குறி வைக்கப்படுகின்றது என்றால் ...?, அந்த அமைப்புக்கு எதிரான அணுகுமுறை தவறான திசையில் பயணிப்பதும் அதிகமாகத் தீவிரவாதத்தை உருவாக்குவதற்காகத் திட்டமிட்ட சதி அப்பயண வழி நெடுகப் பின்னப் படுவதென்றால் ...? இரும்பால் இரும்பைத் துண்டாக்கலாம் என்றப் பழைய ஹிந்திச் சொல்வடையைப் போன்று, சில முன்முடிவுகளை வேறு சில முன்முடிவுகளால் அழிக்க இயலுமோ?.

சிமி தடை செய்யப்பட்டப் பின்னர், கடந்த 7 ஆண்டுகாலமாகத் தீவிரவாதச் செயல்பாடுகளின் மூலம் அரசைத் துடைத்தெறிவதற்கான சதியாலோசனைகளில் ஈடுபட்ட தேசவிரோத இயக்கம் தான் சிமி என்றக் குற்றச்சாட்டில் அரசாங்க ஏஜன்சிகள் உறுதியாக நிற்கின்றன. லஷ்கரே தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷே முஹம்மத் முதலான பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுடன் அதற்குத் தொடர்பு உண்டு எனவும் கூறுகின்றன. இரண்டு வருடத்திற்கு முன்பு மும்பையில் 187 பேர் கொல்லப்பட்ட இரயில் குண்டு வெடிப்பு உட்பட இந்திய மண்ணில் நடந்த அதிபயங்கரமான அனைத்துத் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளிலும் சிமி உறுப்பினர்கள் எனக் காவல்துறையால் கூறப்படுபவர்கள் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர்.

ஆனால், தெஹல்கா நடத்திய மூன்று மாத கால, நீண்ட - இந்தியா முழுவதுமான - விசாரணையில், இதில் அதிகமான வழக்குகள், நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சேபகரமானதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் பிசாசு வேட்டையின் வாசம் வீசக் கூடியதுமாகும் என்பது உறுதியாகின்றது. இதற்குக் காவல்துறை மீதும் புலனாய்வுத் துறைகளின் மீதும் மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல என்பதுதான் அவமானகரமானது. மாறாக, நீதி, நிர்வாக நடவடிக்கைகள்கூட பலவேளைகளிலும் பயங்கரமான முறையில் நீதி மறுக்கப்படும் விதத்தில் அமையப் பெற்றுள்ளன.
***
அஜித் ஸாஹியின் அதிமுக்கியமான, அதிர்ச்சிகரமான இந்த அறிக்கை, சிமி உறுப்பினர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு எதிரான, அதி முக்கிய, பயங்கர வழக்குகளின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியளிக்கக் கூடிய சதிவலைப் பின்னலை விவரிக்கின்றது. இவ்வழக்குகளோ, அனைத்தும் ஆதாரங்கள் அற்றவை; குற்ற விசாரணைகளின் சாதாரண அடிப்படை நடைமுறை நடவடிக்கைகள்கூட மறுக்கப்பட்ட வழக்குகள்; இந்திய இளம் தலைமுறையினருடைய வாழ்க்கையை, அவர்களுடைய குடும்பங்களுடைய வாழ்க்கையை ஈவிரக்கமின்றிக் கசக்கி எறியும் வழக்குகள்.

இந்திய அரசாங்கம் மிகக் கவனமாக அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். கடந்தப் பல ஆண்டுகளாக, சர்வதேச ஒத்த நிகழ்வுகளால் உற்சாகமூண்ட அரச நடவடிக்கைகளும் அநியாயங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு முன்முடிவுடன் கூடிய செயல்பாடுகள் அதிகரிப்பதைக் காட்டுகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பாலிவுட்டின் பெரும்பாலான வில்லன்களும் இஸ்லாமியவாதிகளாக வார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் 16 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்; இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடு நம் இந்தியாவாகும். இவர்களில் ஒரு 10,000 பேர் புரட்சியாளர்களாக இருந்தால் கூட, அது ஒரு பெரும் தோப்பிலுள்ள ஒற்றை மரத்தை ஒத்ததாகும்.

இவ்வினத்தை முழுவதும் அலங்கோலப் படுத்தக்கூடிய சூழலை உருவாக்குதல் மடத்தனமானது. இச்சமுதாயம் முழுவதுமே தடை செய்யப்பட்டவர்கள்(கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்) என்பது போன்ற எண்ணத்தை மக்கள் மனதில் வலிந்து விதைப்பது அபாயகரமானது. அந்தச் சமுதாயம் சமாதானமாக வாழ்வதற்கான மாற்று வழிகளைத் தேடுவதற்கு முன்பு நமது அரசாங்கம் தனது செயல்பாடுகளில் அவசரகதியிலான ஒரு சுயபரிசோதனை நடத்த வேண்டியது கட்டாயமாகும்.

வில்லியம் பாக்னர் இவ்வாறு கூறினார்: "முன்முடிவுகள் மிகவும் நாசகரமானதாக மாறுவது, அது சர்வதேச மயமாக்கப்படும் போதாகும்.!".

அது போன்றதொரு அபாயம், ஒளிர்கின்ற இந்தியாவுக்கு உண்டு என்பதை, தெஹல்காவின் விரிவான விசாரணைகள், தேடல்கள், ஆய்வுகள் அப்பட்டமாகச் சுட்டிக்காண்பிக்கின்றன.
நன்றி : satyamargam.com
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

No comments: